அடியேன் இளம் வயதில் புனைந்த சில தனிக் கவிதைகளை இப்போது சமர்ப்பிக்கின்றேன்:
தைத் திங்கள்
மார்கழி முப்பதும்
மெள்ளவே தப்பிட
ஆர்த்திடச் சேவலும்
ஆளதை வருகிறாள்!
ஒவ்வொரு ஆண்டிலும்
ஓடியே வருகிறாய்!
எவ்வள(வு) ஈடினை
எழுதுவேன் உனக்குநான்?
பகலிலே வெம்மையால்
பட்டிடத் துன்பமும்
நகரவே மதியெனும்
நங்கைபோல் வருகிறாள்!
பொங்கலிந் நாளிலே
பொங்கவே புதுமையும்
எங்களைக் காக்கவே
எழிலரசி வருகிறாள்!
-0-0-
பொங்கல் !
பொங்கல்! பொங்கல்! புதுப்பொங்கல்!
எங்கும் பொங்கும் இசைப்பொங்கல்!
அன்பின் பொங்கல் இன்பொங்கல்!
இன்ப வாழ்வின் ஒளிப்பொங்கல்!
நாடு செழிக்க நற்பொங்கல்!
மாடு மகிழ மணப்பொங்கல்!
மங்களம் பொங்கும் மாப்பொங்கல்!
தங்கவே நலமே தனிப்பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! புதுப்பொங்கல்!
பொங்கலோ பொங்கல்! பொன்பொங்கல்!
-0-0-
இதயப் பரிசு
ஆசைமுகங் கண்டு -- மன
ஆவலினைக் கொண்டு
இசைபாடும் ஆற்றலினால் இவர்புரியும் தொண்டு
பசைபோல் நெஞ்சத்திற் பதிந்ததுவும் உண்டு!
அறியுமெழில் துள்ள --- உளம்
அலர்ந்துமணங் கொள்ள
வறியேனை கீழேனை வந்துவின்பந் தள்ள
பெரிதாக முகங்காட்டி பொழிந்தாரே சொல்லை!
ஆடுங்கலை யரசி -- நெஞ்சு
பாடும் இசை யரசி
ஓடி அவர் உள்ளத்தில் ஒளிந்தாளே; அரசு
ஓயாது புரிகின்றாள் ஒப்பிலாத அரசி!
மலர்சொட்டுந் தேனே -- பெரும்
மனமாகும் வானே
பலர்புகழ பண்ணோடு நாடகத்தைத் தானும்
நிலையோங்க இயற்றுவதை நீங்களின்றே காணீர்!
-----
மனம்
மனமேநீ சென்று விட்டால்
மாளாத் துயரம் அடைந்திடுவேன்
தினமுமெனைத் தேற்றி விட்டாய்
தகுந்த பரிசு என்னசொல்?
துணையாய் என்றன் நிழல்போல
துலக்கும் வண்ண விளக்கேநீ!
கணமும் உன்னைப் பிரியேனே,
கருத்தை அளிக்கும் மனமேநீ!
000
எண்ணிப் பலவும் அளித்திட்டாய்
எழுத்தால் எடுத்து விளக்கிட்டாய்!
நுண்ணிய தெல்லாம் கொடுத்திட்டாய்
நீங்காத் துயரை நீக்கிட்டாய்!
கண்ணினும் மென்மைக் கண்ணேநீ!
கவிதை அருளும் பெண்ணேநீ!
கண்ணினைப் போலுனைக் காப்பேனே!
கனிபோ லினிக்கும் மனமேநீ!
----
(தொடரும்)
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
ஜூலை 10, 2009
------------------------
Friday, July 10, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment