அன்புடன்
அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன்
வர்ணனைக் கவிதைகளில் முதல் தொகுப்பு இதோ:
காலை
தாமரைப் புட்கள் தொழுதிட ஞாயிறு
பாமலர் ஆரம் ‘நா’மகள் சூட்ட
நீள்வரை சூழ்ந்த நள்ளிருள் ஏக
கணங்கணம் சிறிதாய்க் கட்டொளி பிரிய
மணம்தனைப் பரப்பும் மன்னியக் காற்றுடன்
பொதியம் தன்னில் பொழியும் நாற்றம்
கதியெனக் கலந்து சுதியுடன் கூடித்
தென்றல் எனவே சிறுகால் மிதக்க
குன்றிடாத் திரைகள் தோன்றிடும் கடலில்
செவ்வொளி யுடனே சேர்ந்திடும் நீல
வெவ்வொளி யில்லா நல்லொளி தண்மை
அளித்திட எழுவான்; களித்திடும் வானகம்
இருப்பதை அறியும் இவ்வுல கவனது
தருமொளி காணும் தருணம் பிறகே!
எழிலும் இயலும் தழுவிக் கொள்ளும்
காட்சியைக் காணக் காணுமோ ஆயிரம்
மாட்சிமை கூரிய மாவெழிற் கண்கள்?
----
வானக் குடும்பம்
செம்மை படர்ந்தது, சீர்விண் ணென்னும்
நம்மை மயக்கும் நங்கை முகமதில்
இறைவன் *கதிரெனும் இதழ்குவித் தவள்தன்
குறைவிலா எழிலுடைக் கன்னத் திலொரு
அமுதுறை அழகு அதர பானம்
தமதன்(பு) அளிப்பாய்த் தந்திட் டதுமே!
இரவின் கொடுமையின் இறுதியாய்ப் பனித்துளிக்
கண்ணீர் வானம் மண்ணிலே சிந்த
ஆதவன் அரவணைப்பில் ஆவியாய் மறையும்!
நாளே இரவு! நாளெலாம் கூடல்!
இன்பமே ஒளிக்கதிர்! இனிய மக்கள்
தண்மை அளிக்கும் மென்னிள முகில்கள்!
(3-ம் அடி: *கதிர் – கதிரவன்)
---
நிலவு
நீலத்திரைச் சேலையிலோர்
நித்திலம்போல் இன்பமவிழ்த்
தோலமிடும் கடற்புனலில்
ஓடமென மிதக்கின்றாய்!
கோலமெல்லாம் உன்னிடத்து
கூடித்திரண் டெழிற்கோளம்
ஞாலத்திற் கொளியூட்டென்
நெஞ்சத்துநீ தவழ்கின்றாய்!
---
மழை
கடலிலே பிறந்து காற்றிலே மிதந்து
உடலினைப் பஞ்சாய் உருவெனக் கொள்வேன்!
உலகினில் திரிந்து உயர்ந்திடும் மலைக்கும்
தொலைவிலே நின்று தொங்குவேன் விண்ணில்!
கண்ணனின் நிறம்போல் கறுத்திட மேகமாய்
விண்ணிலே ஓரமாய் வளைந்துநான் இருப்பேன்!
கடகட எனநான் கனைத்தே மின்னி,
மடமட எனவே மாரி பொழிவேன்!
தெருவினில் ஓடையாய்த் தேங்கிடும் பொழுது
சிறுவர்கள் கப்பலைச் செய்திடச் சுமப்பேன்!
கதிரவன் சூட்டினைக் களிப்புடன் தடுத்து
மதிதரும் குளிர்ச்சியை மிகமிகத் தருவேன்!
ஆறெலாம் உலகிலே அடைவது கடலினை;
மாறுதல் அடைந்துநான் மறுபடி வருவேன்!
(‘கண்ணன்’ மாத இதழில் வெளியிடப்பட்டது)
---
ஜூலை 4, 2009
Casino, Hotel & RV Park - Mapyro
ReplyDeleteFind the 익산 출장샵 best Casino, Hotel & RV Park in 천안 출장샵 Oxon Hill, IL. Find reviews 부천 출장안마 and discounts for AAA/AARP members, seniors, Rating: 2.7 창원 출장마사지 · 10 오산 출장샵 reviews