Thursday, July 2, 2009

அன்பில் முதல் வணக்கம்

அடியேன் அன்பில் ஸ்ரீனிவாஸன், தற்போது புதுதில்லியில் இருப்பு, மத்திய அரசிலிருந்து ஓய்வுபெற்று வாசம் செய்து கொண்டிருக்கிறேன். 68 ஆண்டுகள் நிறைவு பெற்று ஆன்மீகத்தில் பொழுதைப் போக்கி வந்துகொண்டிருக்கிறேன்.
பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும்போதே தமிழில் எழுதுவதில் ஆர்வம் மிக உண்டு. கட்டுரைகளையும் கவிதைகளையும் கீர்த்தனைகளயும் எழுதித் தள்ளியுள்ளேன். "பத்மம்" என்னும் புனைப் பெயரின் கீழ் பல பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன.
அடியேனுடைய அண்மைக் கவிதைகளைப் பார்த்து, அவற்றில் பலவ்ற்றை கணினி-புத்தகங்களாக வெளியிட்டு வரும் ஸ்ரீமான் திருப்ப்பதி ரகுவீரதயாள் அவர்கள் தந்த ஊக்கத்தின் பேரிலும் வழ்காட்டியதன் மூலமும் இந்த "அன்பில் கவிதை" ப்ளாக்கைத் தொடங்குகிறேன். அடியேனுடைய படைப்புக்களுக்கு வெளிப்பாடாக அமைய எல்லாம் வல்ல ஸ்ரீமந் நாராயண்னின் அருளை வேண்டுகிறேன். இதைப் பார்ப்பவர்கள் எதாவது பயனடைவார்களானால் அது பெருமாளையே சாரும்.

எனவே, முதலில் அவன் வணக்கமாகவே இது தொடங்கட்டும். சிறிய வயதில், அறியாப் பருவத்தில் அடியேன் எழுதிய இறை வணக்கத்துடன் முதலடி எடுத்து வைக்கிறேன். எல்லோருடைய ஆசியையும் கோருகிறேன்.
அன்புடன்
அடியேன் தாஸன்
அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன்

கடவுள் வாழ்த்து
---
நிலையிலா உலகில் நீயெனைப் படைத்தாய்!
கலையிலே என்னுளம் கலந்திட வைத்தாய்!
அலையலை யாய்க்கவி ஆயிரம் பாடியுன்
அலகிலாப் புகழ்புவி அனைத்தும் பரப்புவேன்!
-------
தேனுறு கமலத் திருவடி போற்றி!
கானுற நடந்த திருவடி போற்றி!
வானுற உயர்ந்தோன் இணயடி போற்றி!
யானுற அருள்வோன் இணயடி போற்றி!

வையம் ஏத்தும் எழிலடி போற்றி!
தையாள் ஏந்தும் எழிலடி போற்றி!
ஐயன் அழகன் மலரடி போற்றி!
உய்ய உலகெலாம் மலரடி போற்றி!

குணத்துப் பெரியோன் தாளே போற்றி!
மனத்தே இனியான் தாளே போற்றி!
கணத்தும் நீங்கான் தாளே போற்றி!
வணத்துள் வண்ணோன் தாளே போற்றி!


திருவுடை நெஞ்சோன் தாளே போற்றி!
அருளுடைக் கடலோன் அடியே போற்றி!
இருளுடைத் தகற்றும் இணயடி போற்றி!
கருநிறக் கண்ணன் கழலடி போற்றி!
----
உலகெல்லாம் உன்கண்ணுள்!
உய்யவழியும் உன்னொளியில்!
நிலையில்லா உளத்தோரோ
நினதருளிலா மானிடர்கள்!
கலையேஎன் கருத்தெலாமுன்
கருணையேஎன் வேண்டுதலாம்!
அலைபாயா துளமுன்றன்
அடியிணையில் வைப்பேனே!
----
வாடாமலர் தேனார்குழல் மங்கைதனை உடையோனே!
வரையாம்திரு மலையில்திகழ் மாலே!பரம் பொருளோனே!
சேடாதிபன் மேலேயுறை சீரார்கடல் நிறத்தோனே!
சேணாய்முகில் துதித்தேகும் திருவேங்கடப் பெருமானே!
வீடாம்நின தடியேநினை அடியார்மனம் களிப்போனே!
விந்தைபெரும் விந்தையென வியப்பாருனைப் பணிவாரே!
கூடாதெது உள்ளம்தனைக் கூடச்செயும் பெரியோர்க்கே?
கோலம்புரி கோலமுடை எழிலே!எமக் கருள்வாயே!
----
மலராய் கனியாய் மணமாய் தருவாய் பரந்தோனே!
இலனாய் உளனாய் இருளாய் ஒளியாய் இருப்போனே!
நலமாம் பொருளாய் நினைவாய் உளமாய் நிறைந்தோனே!
உலகாய் அணுவாய் உணர்ந்தாய் எமக்கே அருள்வாயே!
----

எழில்தவழ உலகமைத்து எல்லையிலே கவிஞனையும்
கழியெண்ண உளமளித்துக் கனியெனவே கற்பனையும்
பொழிந்திடவே அமைத்தனையுன் பொன்னான அருளுடனே!
அழிந்திடாத படைப்பெலாமுன் அழகினையே பறைசாற்றும்!----- (தொடரும்)

2 comments:

  1. தாஸன். வாழ்த்துக்கள். தொடரட்டும் தமிழ்ப்பணி.

    ReplyDelete
  2. எழில்மருவு இறைவனடி தொழு(து)உமது வலையிதழோர்
    பொழிலிலுள புதுமலரின் அழகுடனே பொலிந்துசுவை
    வழியு(ம்)மது எனஎமது மனமயங்க அமைந்துநலம்
    கொழிதமிழின் வளமொ(டு)இனும் வளர்கவென வழுத்துவனே!

    ..அனந்த்
    2-7-2009

    ReplyDelete