Saturday, July 4, 2009

இயற்கை வர்ணனைக் கவிதைகள் -- தொடர்ச்சி

இயற்கையை வர்ணிக்கும் அடியேனது முந்தைய கவிதைகளை மீண்டும் தொடர்கிறேன்:
ஆறு
மலையிலே பிறந்து மண்ணிலே பாய்ந்து
அலைதனை உடையாய் ஆக்கிக் கொள்வேன்!
காடும் சோலையும் காணும் நானும்
பாடும் குயிலதன் பாட்டைக் கேட்பேன்!
குழந்தை போன்றே “குறுகுறு” என்றே
அழகாய் நானும் ஆடிச் செல்வேன்!
அம்புலி நிலாவும் ஆசை யுடனே
வம்பு செய்ய வருவாள் என்னிடம்!
நடுவே சிறுவர் நீந்தி ஆடப்
படுவேன் பாடு! பார்த்தால் தெரியும்!
---
குருவி

கடலே, கடலே! கதையைக்கேள்!
காதலுடனே உரைக்கின்றேன்!
துடைத்து துன்பம் ஒழித்தென்றன்
தூய உள்ளக் கதையைக் கேள்!
சடசட என்னும் மழையே கேள்!
சோகம் பொங்கும் கதையைக் கேள்!
கடகட தடதடா இடியே கேள்!
கொடுமை நிறைந்த கதையைக் கேள்!

காற்றே! காற்றே! உரையைக் கேள்!
கலங்கும் என்னை ஆற்றிக் கேள்!
ஊற்றே, ஊற்றே! உரையைக் கேள்!
ஊறும் எந்தன் கதையைக் கேள்!
ஆறே ஆறே! என்னுரை கேள்!
ஆகாத் துன்பத்தை எடுத்துச் செல்!
நேற்றே வந்தச் செடியே கேள்!
நேரும் துயரை நீயே கேள்!
000

பகலில்……..
பகலில் வெயில்மிகப் பரந்திருந் தாலும்
அகமும் மூழ்க் ஆழ்ந்த நினவில்,
துன்பம் வந்தும் தளரா உறுதி
இன்பங் காட்ட இனிதாய் நடந்தேன்;
செல்லும் பாதை சீராய் நீள
மெல்லும் நெஞ்சம் மென்மை எண்ணம்:
“தமிழின் பெயரால் தருணம் கடத்தி
எமதின் ஆசை ஏறிடப் போகும்;
உலக அரங்கில் உயரே பறக்கும்;
அலகில் தமிழின் அன்பைப் பெற்றுத்
தலைவன் அவனைத் தாளில் பணிந்து
விலைமதிப் பில்லா வண்டமிழ்க் கவிதை
அவனடி பரப்பி அருள்தனைப் பெற்று
எவரு மெய்தா இன்பம் அடைவோம்.”
என்றென் உள்ளம் எண்ணிச் செல்ல
என்றன் தலைவன் அகமடை வேனே!
எழிலுறப் பேசிடும் என்தலை வோனை
பொழிய அன்பைப் பொலிவுடன் கண்டு
இதயம் விரியக் கண்மலர் அந்தச்
சிதையாக் காட்சியைச் சுவையாய்க் காணும்!
000
முகில் – 1
கடலிலும் ஆற்றிலும் நீரினை எடுத்து
தாகமே கொள்ளும் செம்மலர் களுக்கு
மடமட எனவே மாரி பொழிவேன்!
மடல்கள் பகலில் மயக்கத் திலாழ
ஒளிநிழல் தனைநான் தாங்குவேன்; எனது
சிற்குகள் சிறுபயிர் எழுப்பும் பனித்துளி
உதிர்க்கும்; அசையும் அவைகள் பரிதியின்
முன்னே ஆடித் தாய்தன் மார்பில்
தவழும் போதே; பசுந்தரை மீதில்
மழைதனைப் பொழிந்து வெண்ணிற மாக்குவேன்;
மீண்டும் அவற்றை மழையில் கலக்கி
கடகட என்றே சிரித்துச் செல்வேன்!
000
முகில் – 2
மலைசோலை மீதுதவழ் முகிலெனநான் அலைகின்றேன்!
கலையுள்ள உணர்வள்ள காட்சிபலக் காண்கின்றேன்!

குளமொன்றின் கரையோரம் கூடும்நுனி மரத்தடியே
அளவற்ற பொன்மலர்கள் ஆடியாடி மனமீர்க்கும்!

பொன்னிறமாய்க் கோடிழுத்து மின்னல்மறை வதுபோன்று
எண்ணற்றப் பொன்மலர்கள் எழிலாக அசைந்தாடும்!
-0-0-(தொடரும்)

அன்புடன்
தாஸன்
அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன்

1 comment:

  1. கேட்கத் தயாராயிருந்தும், "கேள், கேள்" என்ற குருவி கதையைச் சொல்லாமலேயே பறந்து விட்டதே.

    ReplyDelete