பூச்சியும் மலரும் !
பூச்சி: பட்டுச் சிறகடித்துப்
பறந்து வந்தேன் – உனைத்
தட்டுப் பிடித்தொரு
முத்தம் தந்தேன்!
இதழை விரித்தென்னை
அணைத்துக் கொள்வாய் – உன்றன்
மதுவை எனக்களிக்க
மலர்ந்து கொள்வாய்!
மலர்: என்னையே தேடிவரும்
அழகு பூச்சி! -- உன்னைக்
கண்டதும் உள்ளத்தில்
களைப்பே போச்சு!
எங்கும் திரிந்துவரும்
உன்னைக் கண்டால் -- எனக்குப்
பொங்கும் பொறாமை
பெரிதும் உண்டாம்!
யாரும் உனைக்கேட்க
ஏதும் இல்லை -- எந்த
ஊரும் உன்றனக்கு
எதிராய் இல்லை!
பாடிப் பறந்துவரும்
பட்டுப் பூச்சி! – உன்றன்
ஆடலில் மயங்குகின்றேன்
ஆனந் தமாச்சு!
--0—0--
பேடையின் பிரிவு
கட்டிவைத்த கூடிருக்கக்
கண்ணேநீ எங்குசென்றாய்? (கட்டி)
விட்டுவைத்த நெல்பொறுக்க
வீடேகிப் போனாயோ?
தட்டுவைத்த குழந்தைக்குக்
கதைசொல்ல போனாயோ? (கட்டி)
நேற்றிரவு வேறிடத்தில்
நான் தங்கி விட்டதனால்
சீற்றம்தான் கொண்டாயோ?
சீராகப் புல்லடுக்கிக் (கட்டி)
நான்கேநாள் ஆகுமுன்னே
நம்காதல் பழுக்குமுன்னே
வீண்காதல் ஆயிடுமோ?
விழலாகிப் போயிடுமோ? (கட்டி)
--0-0-- (தொடரும்)
தாஸன்
அன்புடன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
9-7-2009
Wednesday, July 8, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment