Wednesday, July 15, 2009

காதல் கவிதைகள் -- 4

காதல் உள்ளம் (1)
தண்ணொளிர்ப் பொன்கதிர் தாழ்த்திக் கதிரவன்
மண்ணிலே தாமரை மென்னிதழை -- எண்ணா
எழிலாக்கும்; அம்மலர்போல் என்னுளம் ஈர்த்தாள்
மழலைச்சொல் பேசும் அவள்.

அம்பலக் கூத்தனின் அன்புதன் எல்லைபோல்
உம்பரும் கண்டதில் ஆழ்ந்திட -- அம்புபோல்
மென்நுனி கூர்மையாய் நீண்டவள் கண்ணென்றன்
மென்னுளம் புக்கது காண்.

ஆனந்தச் சித்தனின் ஒப்பில் மிடற்றிலே
நானந்த நாகத்தை நண்ணுவேன் -- மானந்தப்
பெண்ணெனும் அன்னமாய் ஆடியசைந் தோடிடும்
மென்னிடைக் காரிகை கண்டு.

கங்குலோ ஒண்பகலோ, கண்களின் மாறுதலோ
திங்களும் வந்திடக் காரணம்? -- அங்கவள்
இன்முகத் தண்மைகண் டின்றையோ பூர்ணிமை
என்னவோ? எண்ணுவேன் யான்

சொல்லெனும் இன்சுவை செப்பிடும் வாயாலே
வல்லவள் உள்ளத்தை ஈர்ப்பதில் -- கல்லுமே
அன்னவள் காட்சியால் நீர்த்துக் கலந்திடும்
பெண்ணவள் சொல்லிலே காண்.
-- 0 --


காதல் உள்ளம் (2)
வானிடிந்து முகிலொடிக்க வேணியுடைக் கூத்தன்
மாவடிகள் நிலம்பிளக்க தாவிநடம் செய்தோன்
மேனியெனக் கருத்தெழவே நானவரைக் கண்டு
மெள்ளமெள்ள என்றனது உள்ளமதைக் கொண்டு
மானினைப்போல் துள்ளியோடி யானவரைப் பிடிக்க
மாறிடாது காதலுடன் ஆறிடாது துடித்து
ஞானியிந்த உலகத்தின் மோனியவள் தனைப்போல்
ஞாலத்தில் அவரெனவே காதல்மிகக் கொண்டேன்.

திண்தோளும் வன்கையும் விண்ணதினிற் கொழிக்கும்
சிதம்பரன்போல் நிறைந்தவரும் விதம்விதமாய் செழித்தும்
எண்திசையும் மூவுலகும் ஒண்கதிரைப் பரப்பும்
எழில்வட்டக் கதிரவனின் அழியாவொளி திறத்தில்
எண்ணிடாதோர் பெரும்பகுதி கண்ணதிலே கொண்டும்
எங்குமவர் உள்ளத்தில் பொங்குமன்பும் உண்டு;
மண்ணிலேயார் சொல்வல்லார் என்னிலவ ரேதான்
மங்கையெனது உளம்புகுந்து சொந்தமெனக் கொண்டார்.
-- 0 --

கொட்டும் மழையில் …….
கொட்டும் மழையில் கோலம் புரிந்து
பட்டுப் பாதம் பயின்ற நடையின்
விட்ட பொருளெனை வாட்டுங் கொடுமையைக்
கட்டு உரைக்கவே கவிதை இழந்தனே!

முத்த நீருன் முகத்தை அணிசெயப்
புத்தம் புதியதாய் பூத்த பொலிவினில்
பத்துப் பத்தாய்ப் பல்கிய உணர்வெலாம்
குத்தத் துடிக்குமென் குளிர்ந்த நெஞ்சமே!

காணும் கண்களும் களிப்பைச் சமைக்கவும்
பாணும் இசைக்குமுன் பங்கய இதழ்களும்
வானும் வெட்கிட வளைந்த புருவமும்
நாணும் கொடியுமே நல்கும் துன்பமே!
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
15-7-09
--------------

No comments:

Post a Comment