காதல்
நிலந்தழுவி மகிழ்வுபெறும் நெடுங்கடலாம் மடந்தையவள்
நிலவுதரும் ஒளியிலவிழ் நறுங்குமுத மலருமிந்த
உலகினிலேன் நிலவவேண்டும்? உனைப்படைத்து எனைப்படைத்த
அலகிலாபேர் உருவுடையோன் அவைபடைத்தான் அறிந்திடுவாய்!
கருமுகில்கள் அமுதமுத்தம் களித்தளித்து அணைத்திடுமிப்
பெருமலைகள்; நினைவலைகள் பெரியவின்பம் அனைத்துமுறும்
திருவுளத்தால்; கவிபலவும் திரளெழிலைத் தழுவிநிற்கும்;
உரு உவமை அவைதனுக்கே உனைத்தழுவ எனைப்படைத்தான்!
நினைவுகொளா எழிலுருவம்; நினைவழிய துடியிடையும்;
எனையழைக்குங் கயல்விழியும்; எதையுமீர்க்கும் மலரிதழும்;
வினையழிந்து கருகிடவே விரவுமன்பு தருமுளம்நீ;
எனைக்கவிகள் இசைத்துவர இனியவுனைப் படைத்தனனே!
நிழலொளியாய்; பதப்பொருள ய்; நிறைவிசையும் புகழ்க்கவியாய்;
கழலொலியாய்; சிவமகளாய்; கமலமென உனையணுகிக்
குழல்புரளும் மெலிவிடையை குலவுகவி தனிலமைக்கப்
பழம்பெரியோன் எனைப்படைத்தப் பொருள்விளங்க எதிர்வருவாய்!
பருதிதனைத் தொடர்ந்துவொளி பரப்பிவானில் மதியவனும்
வருவதெல்லாம் உனதுளத்தை வரிந்தடைய; எனையருகில்
இருக்கநோக்கி மறைந்துவோடும், இருள்படர, நினைவழிந்து
கருவெனது பெருநினைவின் கவினுருவாய் அமைந்தநீயே!
அவனியும்பல் உலகமுந்தாம் அருக்கனையே சுழன்றுசுற்ற
தவமுனிகள் ஒருவனையே தழைந்துசுற்ற இயற்கையென
துவள்குழலுன் எழில்வடிவைச் சுழன்றுவரும் எனதிதயம்
கவியுருவாய் நினைவுலகும் கலைப்படைப்பும் எனதுளமும்!
அழிவிலது நமதுகாதல்; அதுவனைய படைப்பென்னும்
எழிலுனதும் அழிவிலதே; எனவியற்கை அமைந்ததுகாண்!
குழலுனது எனைப்பிணைக்கக் குழையவினப் புணர்வினிலே
கழியினிக்கும் கவியமுதம் கனந்தெழுமே இனிதெனவே!
எனதெனநான் படைக்குமிந்த எழிற்கவிதை உண்மையிலே
உனதழகின் மதுவளிப்பாம்; உலகிதனை அறியுமோதான்?
வனத்திடையே மலர்ந்தநறு மலர்க்குமுதம் நினதெழிலாம்!
மனத்திடையே சுடர்விடும்நீ அமுதினுயர் கவிப்பொருளே!
--0—0--
தாபம்
கங்குலைக் காண அஞ்சிக்
கண்தனை மூடித் தொல்லை
பொங்கிட நிற்பேன் நானே
பொய்கைப் புனலின் நடுவே!
நடுக்கிடும் குளிரை வைத்து
நங்கையென் மேலே கதிர்கள்
விடுத்திடும் மதியை நொந்து
விதியென மயங்கு வேனே!
காதலன் ஊடல் இ#தோ?
காட்டிய முகத்தை மறைத்து
வேதனை பெருக்கும் இருளை
வளர்த்ததும் அவன்விளை யாட்டோ?
--0—0--
வண்ணம் குலைந்து ……
வண்ணம் குலைந்து
எண்ண இயலா(து)
இறைந்து பரவியதே --- உன்
நிறைந்த எழில்முகமே! -- என்
எண்ண அலைகளை
எழுப்பும் மதிமுகமே!
கன்னல் மொழிதனை
இன்னுற அளித்திடும்
சுந்தரச் சிறுவிதழ்கள் -- பெரும்
மந்திரச் செம்மைகொளும் -- அவை
என்னைக் கற்பனைக்
கிண்ணத் தாழ்த்திவிடும்!
--0—0—
அவள்
ஓடிவந்தாள் என்னிடமே
ஓங்குகடல் திரைபோல;
ஆடிவந்தாள் அழகரசி
ஆசையுளம் ஆடுவதால்;
பாடிவந்தாள் பவளவிதழ்
பட்டுச்சொல் அணைத்திடவே;
நாடிவந்தாள் என் துன்பம்
நலிந்துநிலை குலைந்திடவே!
சூழும் இயற்கைக் கவினதிலே
சூடும்பேர் இனிமையெலாம்;
வாழும் இயற்கை வாழ்வதிலே
வளியென்று தனைக்காட்டி;
ஊழும் இயற்கை நெறிமுறிய
உயிரளிக்கும் பரமனென;
தாழும் கயற்கண் தரைநோக்க
தாவிவரும் அவள்யாரோ?
மலைவளர்த்துக் கான்பெருக்கி
வழியெல்லாம் முள்ளமைத்து,
கலைவளர்த்து ஊணுருக்குங்
காட்சிபல நன்றமைத்து,
அலைவளர்த்துக் கடல்பரப்பி,
அழகெனவே செய்துவைத்தான்;
சிலைவளர்ப்போர் வியப்புடையாள்
சீர்நடைகள் பயில்வதெங்கே?
--0—0—
காதலிலே தோல்வியுற்றால் ……
உள்ளத்து நெருப்பை மூட்டி
உவகையை வற்றச் செய்தாய்!
பள்ளத்துப் பாயும் எண்ணம்
பழியை நாடிச் செல்ல
மேலான எழிலைப் பெருக்கி
மெலிவான உடலைக் காட்டி
‘கூலா’க நடந்து காதல்
குகையுள்ளே கூட்டிச் சென்று
நெஞ்சினையே உருக்கி விட்டாய்;
நேர்மையெல்லாம் ஓட்டி விட்டாய்;
வஞ்சினத்தில் சொல்லைத் தோய்த்து
வாரியென்மேல் இறைத்துப் பள்ளப்
படுகுழியில் வீழ்த்தி விட்டாய்
பாதகியே நின்றன் நெஞ்சப்
படுகுழியில் நஞ்சை நிரப்பிப்
பாரினையே முழுக்க வந்தாய்;
காட்டுள்ளே விலங்கு போல
கானத்து மிருகம் நீயே!
ஏட்டுள்ளே உன்னப் பூட்டி
ஏசித்துப் பழியைத் தீர்ப்பேன்!
-0—0—
காதலிலே வெற்றியுற்றால் ……
மோகனக் கற்பனைகள் முயன்றும் வரவில்லை
தோகை!நின் பேச்சுக்குச் சூட்டும் அழகெங்கே?
கானக் கருங்குயிலும் வீணைக் குழலிசையும்
நாண உன்குரலைச் சாணைப் பிடிப்பதெங்கே?
அன்பே ஆரமுதே! ஆலம் விழுதைப்போல்
நெஞ்சின் நினைவுன்னை நோக்கிப் படருதடீ!
வஞ்சிக் கொடியணையாய்! வாடி வதங்குகிறேன்
பஞ்சுக் கைகள்தம் பட்டான முத்தங்கள்
நெஞ்சில் ஏறுதடீ, நெருப்புச் சூட்டைப்போல்!
வேட்கைப் புகைகிளப்பி விந்தை மணம்பரப்பும்
வீட்டுச் சாம்பிராணி வேலையில்லை, காதல்தான்!
--0—0—
கிளி விடு தூது
ஆடி அசைந்து
ஓடி வா என
பாடி அழைக்காயோ -- கிளியே
பாடி அழைக்காயோ! (ஆடி)
நாதம் இழையும்
ஊதுங் குழலால்
கீதம் இசைப்பேனே -- எனநீ
வாதம் செய்தவளை (ஆடி)
வானத் திரையிலே
ஆன திருளே
மீன விழியாளை -- என்றன்
ஊனில் உயிர்தங்க (ஆடி)
சோலை நடுவிலே
மாலை முடிவிலே
காலம் மறந்தேன் -- அவளின்
கோல உருக்காண (ஆடி)
தாகம் வளர்த்த
சோகத் தீயிலே
சாகும் நிலைகொண்டேன் – கிளியேனி
வேக மாயேகி நீ (ஆடி)
-- 0--
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீவாஸன்
14-7-09
--------------
Tuesday, July 14, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment