Thursday, July 23, 2009

தனிக் கவிதைகள் -- 9

என் பேறு
(விவேகானந்தா கல்லூரி தமிழாசிரியர் திரு ப. இராமன் அவர்களிடமிருந்து ஒரு கடிதம் பெற்ற மகிழ்ச்சியால் எழுந்த கவிதை : 27-8-1963)

ஆறா நெடுமனத் தாசையால் வாடினேன் வாழவே,
கூறாக் களிப்பென்னைக் கோடியாய்க் கூடவே, நாளுமே,
மாறா தகாதலும் மாண்புற நாடின முடங்க லென்
பேறா குமாலென் பெருவாழ்வு பழுத்தது போலுமே!
-- 0 --
ஆசிரியருக்கு
{இந்நான்கு விருத்தங்களும் , அடியேனின் கல்லூரி தமிழ் ஆசிரியர், திரு ப. இராமன் அவர்களுடைய இனிய கடிதத்திற்குப் பதிலாக எழுதி அனுப்பப் பட்டவை. இதில் குறிப்பிடப்படும் அவர் இயற்றிய வெண்பா இந்த கவிதைகளின் முடிவில் தரப் படுகிறது --- 6-9-1963}

அன்புடைய ஆசானின் ஆசி தன்னை
அரியதொரு செல்வமெனப் போற்று கின்றேன்;
இன்புடைய சொற்களுடை முடங்கல் தானும்
என்பேறே எனவெண்ணிப் பெருமை கொண்டேன்;
என்புடனும் தசையுடனும் நரம்பும் பலவும்
இயைந்தபிணி உடலுக்குள் உள்ளம் வைத்துப்
பண்புடைய கருத்துடனே அன்பும் சேர்த்துப்
படைத்திட்ட தெல்லாமே இதற்குத் தானோ?
மணிமுத்துப் பொய்கையென தங்கள் கடித
நல்முத்துச் சொற்கடலுள் குளித்து நலமே
அணிவித்துக் கொண்டெனது அறிவைப் பெருக்கி
ஆனந்தம் தானடைந்து நின்ற காலை
தனிமுத்தாய் ஆனதொரு வெண்பா என்றன்
தலையைத்தான் நிமிர்த்துமதன் அழகி னாலே
பனிமுத்துத் தாமரையில் தங்கும் திருவே
‘பத்ம’த்தில் தங்காத முரணை விட்டீர்!

என்கவிதை நற்கவிதை அல்ல வெனினும்
என்றன்தமிழ் ஆசிரியர் அருளைப் பெற்றால்
பொன்கவிதை ஆகிடுமே! போதும், போதும்!
பார்முழுக்கப் புகழொன்றும் வேண்டாம், வேண்டாம்!
உன் கவிதை முளைவிட்டுத் தழைத்தே ஓங்கி
உயர்ந்ததுவாம் தருவானால் விய்ப்பும் உண்டோ!
இன்கவிதைக் காவியமும் இயற்றும் பேறாம்
இன்பத்தை அடைவேன் நும் அருளினாலே!

ஆசிரியர் அன்புக்குப் பாத்திர மாகும்
ஆசையன்றி வேறில்லை எனக்குத் தானே;
நாசிறிய தென்றனக்கே என்ப தாலே
நன்கமையா என்சொற்கள்; நல்கா வின்பம்;
‘நீ சிறியன்’ எனக்கூறி, என்றன் பிழையை
நீக்கிவிட்டு நலமெடுத்து (இருக்கு மாயின்),
பேசரியப் பெருமையுடை ஆசி ரியரே,
பெருமருளைப் பொழிவீரே! பணிகின் றேனே!
--- 0 --
{திரு ப. இராமன் அவர்கள் அடியேனுக்கு அனுப்பிய வெண்பா:-
செந்தா மரைமலரும் சீர்கவிப் பத்மமும்
அந்த மலர்ச்சியால் ஒப்பரால் -- அந்தத்
தண்டா மரைகூம்பும் பத்மத்திற் கஃதில்லை
பண்டே அறிகுவேன் நன்று.}
-- 0 --

அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
23-7-09
--------------

No comments:

Post a Comment