ஒரு கால விசேஷத்தில், அழ.வள்ளியப்பா முதலிய குழந்தைக் கவிஞர்களுடன் பழகும் வாய்ப்பு ஏற்பட்டது. அவர்களுடைய தொடர்பினால் சில கவிதைகள் உருவாயின. அவற்றில் சில……
ஆனையும் பாப்பாவும்
ஆனை ஒன்று வருகுதாம்!
ஆடி ஆடி வருகுதாம்!
பானை போன்ற வயிறைத்
தூக்கி மெதுவாய் வருகுதாம்!
பாப்பா தம்பி தங்கையும்
பார்க்க ஓடி வந்தனர்!
பாப்பா கையைத் தட்டிப்
பார்த்துப் பார்த்துச் சிரித்ததாம்!
நாலு காலும் அசைந்திட
நீண்ட கையும் ஆடிட
வாலும் காதும் விசிறிட
வானும் அதிர வருகுதாம்!
என்றே கேலி செய்த்ததாம்,
எங்கோ வந்த ஆனையை!
சென்று எங்கோ மறைந்ததே,
அருகில் ஆனை வந்ததும்!
--0--
எண்ணியபடி செயல்!
சின்ன அழகுக் குருவி -- அது
சின்ன வீடு கட்டி அதில்
என்றும் வாழ நினைத்ததாம்!
எண்ணி யெண்ணிப் பார்த்ததாம்!
வீடு கட்ட குச்சி தேடி
வீடெலாம் அலைந்து சென்று - இந்த
நாடு முழுதும் திரிந்ததாம்!
நாலு குச்சி கிடைத்ததாம்!
குச்சி எடுத்துப் பறந்து வந்து
குடிசை ஒன்றைக் கட்டி மரத்தின்
உச்சிக் கிளையில் வசித்ததாம்!
உளத்தில் மகிழ்ச்சி கொண்டதாம்!
--0--
பொம்மை கல்யாணம்
கண்ணன் என்பது என்பொம்மை!
கமலா என்பது அவள்பொம்மை!
எங்கள் பொம்மை இரண்டிற்கும்
எட்டாந் தேதி கல்யாணம்!
‘பாம்பாம்’ மோட்டார் ஊர்வலமே,
பார்த்து மகிழ்வீர் அன்றைக்கு!
‘தாம்தீம்’ என்று நாட்டியமும்
கொட்டு மேளமும் ஏற்பாடு!
என்னைச் சும்மா அழைக்காதீர்,
எனக்கு நிறைய வேலைகளே!
தின்ன இனிக்கும் பண்டங்கள்
செய்யும் வேலை நிரம்பிருக்கு!
‘வாரும் வாரும்’ எனச்சொல்லி
வணங்கி உம்மை வரவேற்போம்!
பாரும் பாரும் அந்நாளை
பார்த்தால் வியந்தே போவீர்கள்!
----
தாத்தா தாத்தா கதை சொல்லு!
தாத்தா தாத்தா கதைசொல்லு,
தாத்தா நல்ல தாத்தாநீ!
கேட்டால் நன்றாய் சிரிப்புவர
கேலிக் கதைகள் பலசொல்லு!
கொட்டைப் பாக்கு கொண்டுதரேன்,
கொலையில் லாதக் கதைசொல்லு!
வெட்டுங் குத்தும் வேண்டாமே,
வீணே பயத்தைக் காட்டாதே!
வெற்றிலைச் சுண்ணாம் புநான்தருவேன்,
வேடிக்கை யாகக் கதைசொல்லு!
நெற்றிச் சுருக்கி எங்களுக்கு
நீதிக் கதைகள் மிகச்சொல்லு!
தாத்தா தாத்தா கதைசொல்லு,
தாத்தா நல்ல தாத்தாநீ!
--0--
எறும்பே!
எதை நீ தேடுகின்றாய்! எறும்பே, சிற்றெறும்பே!
உதவி செய்வேன்நான் உனக்கு யாதுவேண்டும்சொல்!
சுற்றிச் சுற்றிவந்து சிவக்க உன்சிற்றுடல்
பெற்றிடா தாத்துன்பம்? பேசா துசெல்கின்றாயே!
அச்சம் கொள்ளாதே அடித்திட மாட்டேனுனை!
மிச்ச முள்ளவெல்லாம் சிறிதளிக் கின்றேன்நில்!
--0--
தீ
சுட்டெரிக்கின்றாய் --- உனைநான்
தொடிட மாட்டேனே!
சிவந்ததுன் முகம் --- ஆனால்
கரிந்தது உன் நெற்றி!
வளைந்தாடுகின்றாய் --- சுட்டால்
வரமாட்டேன் அருகில்!
களைந்தெறிகின் றேன் உன் --- சூட்டை
காணோமே உனையே!
--0--
(தொடரும்)
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
ஜூலை 7, 2009
Tuesday, July 7, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment