Tuesday, July 28, 2009

கலியன் புரிந்த அருள்

இந்த பாசுரங்கள் இரண்டு வாரங்களுக்கு முன் எழுதப் பெற்றவை.

-------------


கலியன்மேல் காதலினால் கலியனது திருமொழியை
வலிகொண்டு ஊக்கத்தால் வெறிகொண்டு படித்திட்டேன்;
ஒலிநயத்து மூழ்கியதால் ஒன்பதெனும் திருமொழியின்
வலிச்சுழலில் அகப்பட்டு; மீளாது மூழ்கிட்டேன். 1

திருமலையில் குடிகொண்ட தேவனிடம் ஆட்பட்டே
அருசுவையாம் பாசுரத்தில் ஆழ்ந்திழந்தேன் என்மனத்தை;
இருந்தவிடம் மறந்தொழிந்தேன்; இரைந்திரைந்து பாடலுற்றேன்;
ஒருசொல்லும் எனைவிட்டு ஓடாமல் ஒட்டியதே. 2

தாய்தந்தை முதலாகத் தாரமெனும் சொந்தமெலாம்
நோய்களையே தருவனவாய் நலிவடையச் செய்ததெலாம்
நாய்போன்ற என்றனது நினைவினிலே தோன்றினவே;
பாய்கின்ற நதிபோல பாக்களைநான் படித்துவந்தேன்! 3

பெண்களெனும் வலையில்நான் பட்டபெரும் துன்பமெலாம்
கண்ணெதிரே நிறுத்திட்டார் கலியனெனும் நல்லாழ்வார்!
உண்மையிலே இரக்கமின்றி ஒருவருக்கும் நற்செயலை
எண்ணாது இருந்ததனால் இவ்வாழ்வை வீணடித்தேன்! 4

இப்பிறப்பில் நிகழ்ந்ததெலாம் இப்படியெனில் என்றனது
முப்பிறப்பில் எந்நலனும் முயலாமல் இருந்திருப்பேன்!
அப்படியே செய்தவனாய் ஆகிலுமென் நலம்தனையே
தப்பாமல் மனத்திருத்தி நல்வணிகம் செய்திருப்பேன்! 5

சுயநலமே மனத்திருப்பத் திருவேங்கடத் தானையேநான்
நயந்தவனாய் ஒருநாளோ நொடியினிலோ எனதுளத்தில்
பெயரொன்றை எண்ணிடவோ பணிந்தவனை வணங்கிடவோ
முயலாமல் வாழ்வெல்லாம் முடித்திருப்பேன் ஐயமில்லை! 6

மண்ணாலும் நீராலும் மஞ்சுலாவும் இடத்தாலும்
பண்ணியவென் ஆக்கைகளைப் பலவெடுத்தும் புரிந்தேனா
புண்ணியங்கள்? அல்லவல்ல; பாவங்களே செய்திருப்பேன்!
எண்ணங்கள் இப்படியே என்மனத்தில் எழுந்தனவே! 7

கலியனது பாவரிகள் கற்களென ஊன்றிடவும்
செலத்தொடங்கி நடந்திட்டேன் நீள்வழியே; ஓரிடத்தில்
நலம்கேட்டு எனைநிறுத்தி நயமுடனே யாரோஓர்
நலமனிதர் பேசுகையில் நானுரைத்தேன் எனைப்பற்றி! 8

வயதாகிப் போனதனால் வசதியுள இடமொன்றை
விழைந்தடியேன் தேடிலுமே வீணான என்றனது
முயற்சியினைத் தெரிவித்தம் மனிதரைநான் பார்த்துநின்றேன்;
வியப்புடனே எனைப்பார்த்து வலிந்தவரே சொன்னாரே! 9

‘வேறெங்கு போயிடணும், விரையார்திரு மலையிருக்க?
நாறுமலைத் தாழ்வரையில் நிலைகொண்ட அலர்மங்கை
ஊரிலேஓர் அமைப்புளது! உமக்கேற்கும் நன்றாக!
சேருமங்கே!’ என்றுசொல்லி நகர்ந்துபோனார் அம்மனிதர்! 10

யாராரோ பிடித்தேநான் அவ்விடத்தை அறியலுற்றேன்;
நேரத்தைச் செலவிடா தங்கேநான் ஏகினனே;
சீருடனே இயங்கிவரும் நல்லமைப்பைக் கண்ணுற்றேன்;
வாருமென அன்புடனே வரவேற்றார் அடியனையே! 11

இன்றிருக்கும் வீட்டினுக்கோர் ஏற்பாடு செய்துவிட்டு
என்றேனும் ஒருநாள்யான் ஏழுமலை அடிவாரம்
சென்றிடலாம் என்றெல்லாம் செழுங்கனவு பன்னாட்கள்
நன்றுகண்டும் அக்கனவு நனவடையா தாயிற்றே! 12

அவ்வமைப்பில் தங்கியபோ தரியதொரு வாய்ப்புதனால்
செவ்வியசீர் மலைசென்று தேவனுடை தரிசனமே
பவ்வியமாய்க் கிட்டியதால் பெருமகிழ்ச்சி உற்றேன்நான்!
அவ்வளவே அண்டியது! அதன்பின்னர் வேதனையே! 13

என்வீட்டை ஏதும்செய இயலாமல் தொடர்ந்ததுவே
என்வாழ்வு தனிமையிலே; எத்தனையோ நாட்களுந்தான்
தன்னாகக் கழிந்திடவே திருப்பதிக்குச் செலும்வாய்ப்பு
என்னைவிட்(டு) அகன்றதுவே ஏதேதோ சிந்தைகளால்! 14

என்வீட்டில் தனிக்காவல் கைதியைப்போல் இருந்தபோது
என் தெய்வம் மலையப்பன் என்வீட்டில் நுழைந்திட்டான்!
என்னெதிரே தொலைக்காட்சிப் பெட்டிதனுள் பாங்காக
வந்துவந்து செல்கின்றான், மலையினிலே வீற்றிருந்தே! 15

கிட்டத்தில் வந்துநின்று களைநிறைந்த தன்முகத்தைத்
தொட்டிடவே அழைப்பான்போல் துணிந்தவனே காட்டுகின்றான்!
பட்டாடை நடுவினிலே பளிச்சென்று தன்கரத்தை
விட்டொழிப்பாய் கவலையென வலிந்தவனே நீட்டுகின்றான்! 16

“விண்ணோர்தொழும் வேங்கடமே வெகுதொலைவில் இருந்தாலும்
நண்ணியுன்னை நான்நாடி நெருக்கமுடன் உன்வீட்டின்
முன்னறையில் நின்றுகொண்டு மறவாமல் அனுதினமும்
எண்ணற்ற முறையென்றன் எழிற்சேவை காட்டுகின்றேன்! 17

மலையடிக்கீழ் வாழ்வதனால் மீளமீள எனைநேரில்
வலியிலாமல் அண்டியனாய் நெடுநேரம் காண்பாயோ?
அலைபாயும் கூட்டத்தில் அங்கெங்கே எனைக்காண்பாய்?
சிலநொடிகள் காண்பதற்கே செலவாகும் பலநாட்கள்! 18

நானிலாத இடமுண்டோ? நானிலாத நொடியுண்டோ?
நானிலாத நினைவெல்லாம் நன்றாக அமைந்திடுமோ?
நானிலாத செயல்பாடும் நலமாக நடந்திடுமோ?
நானிலாது நீயுளயோ? நெருங்கியுளேன் உணராயா? 19

இருப்பிடமே வைகுண்டம் எனையேநீ நினைத்தாயேல்!
இருப்பிடமே திருமலையாம், என்‘சானல்’ பார்த்தாயேல்!
இருக்குமிடத் திருந்திட்டால் எனையேநான் தருகின்றேன்!
வருத்தமுண்டோ என்னடியை நீவிடாமல் நினைத்திட்டால்? 20

என்னைநினை! அன்புடனே எனைப்பூசி! எனைவணங்கு!
என்னுடனே சேர்ந்திருப்பாய்! எனைவிடுத் தகலாமல்
என்னிடமுன் மனம்வைத்தால் எனைக்காண்பாய் எங்கெங்கும்!
என்னில்நீ இருந்தாயேல், என்னிடமாய் உனைக்கொள்வேன்!” 21

இத்தனையும் அவன்சொல்ல எடுத்துரைப்பர் வல்லுநர்கள்
எத்தனையோ முறைகள்தாம் என்முன்னே எழுந்தருளி
பத்தியினைப் புகட்டுவர்கள்! புவிதனிலே இதைவிடவே
மெத்ததென ஒன்றுளதோ? மெய்கண்டேன் மெய்தானே! 22

-- 0 --

அன்புடன்
தாஸன்
அன்பில் எஸ். ஸ்ரீனிவாஸன்

28-7-2009

Sunday, July 26, 2009

தனிக் கவிதைகள் -- 12

பிறையாகிப் போனதுவேன்?

வட்ட நிலா உன்னைவெட்டி வதைத்தவரும் யாரோ?
எட்ட முடி யாதவுனைத் தொட்டவர்தான் எவரோ? (வட்ட)

கள்ளமிருள் சூழ் உலகில் கலங்காதே என்பதுபோல்
உள்ளமுரு துயர்துடைக்க உலவிவந்தாய் முழுநிலவாய் (வட்ட)

நல்லகவி கற்பனைகள் நீஎனெக்குத் தந்ததெல்லாம்
இல்லையென ஆகியதே; இனியெங்கே நான் செல்வேன்?
அல்லிமலர் விரிந்திடுமோ? அலைகடலின் இசைவருமோ?
சொல்லெனது நாவருமோ? சுகம்வருமோ சொல்பிறையே! (வட்ட)

காதலினால் பிரிவுற்ற கன்னியவள் தவிக்கின்ற
வேதனைக்கே அளவிலையோ? வெம்மையென எரிக்கின்றாய்!
காதம்பல நடந்ததனால் இளைத்தாயோ ஒருபாதி?
நீதந்த குளிர்மையிலே உருகியதோ உன்னுருவம்? (வட்ட)

பாலூட்ட குழந்தைக்கே பாட்டுசொல்ல என்செய்வேன்?
தாலாட்டி உனைக்காட்ட தங்கநிலா உருவெங்கே?
காலத்தின் பாதையிலே கரைந்தாயோ ஒருபாதி?
ஞாலத்தின் இருளுன்னை நஞ்சாகக் கருக்கியதோ? (வட்ட)

பிறையாகிப் போனதுவோர் பெருமுனிவன் சாபமதோ?
குறையாகிப் போனதுவேன் கோலமுறு கவிமலர்கள்?
வரையாத ஓவியன்கை வண்ணமுனை வளைத்ததுவோ?
இரையாக அரவமுனை அரையாக்கித் தீர்த்ததுவோ? (வட்ட)
-- 0 --

எது முன்னேற்றம்? ---- கல்வி!
(சென்னை வனொலியில் இக்கவிதை ஒலிபரப்பப் பட்டது.)

வள்ளுவனும் இளங்கோவும் மாகவிஞன் கம்பனுமே
துள்ளுகவி இலக்கியங்கள் தந்த நாடிதுவாம்!
கல்தோன்றி மண்தோன்றாக் காலம் முதலாய்
நற்றமிழும் நடைபயின்ற நங்கையெனப் போற்றுகிறோம்!

கற்பதே தருக்களெனக் கல்விக் கூடங்களும்
சொல்பயின்று பொருள்பயின்ற ஞானப் பேறுடைந்து
ஊன்மறைந் தாலும் உற்றபுகழ் மறையாமல்
நூலுருவாய் வாழ்ந்தவரும் நல்லறி வாளர்களும்
மல்கிய நாடென்றே மார்தட்டிக் கொள்கின்றோம்!
கல்வியிலே முன்னேறி கற்பதெல்லாம் கற்றோமா?
ஆக்கப் பொருளெல்லாம் அறிந்து சிறந்தோமா?
தேக்கத்தில் சுழலாமல் திசையறிந்து வந்தோமா?
காலப் பெருவெள்ளம் கடிதே செல்கிறதே,
ஞாலத்தில் உள்ளதெல்லாம் நன்கே அறிந்தோமா?
அணுத்துளைத்துப் போர்புரிய அழகாகக் கற்றோமே
ஆள்துளைக்கும் துயரதனை, அறியாமைப் பேயை
பஞ்சக் கொடுமையினை பிணியின் நஞ்சுதனை
விஞ்சி அறிவாலே விரட்டி அடித்தோமா?
அகரம் முதலாக அருங்கலைகள் கற்றுணர்ந்து
அகன்றதுவாய் உளம்விரிந்து ஆற்றத் தொடங்குமுனம்
வீட்டுத் தொல்லையினால் விடுத்தே ஏகுகிறான்;
நாட்டமெல்லாம் தொழிலொன்றை நடத்திப் பிழைப்பதுதான்!
பள்ளியிலே படித்தவைப் பறந்தோடிப் போயிடவும்
உள்ளம் விரிவின்றி உயரும் அறிவின்றி
பள்ளத்தில் உழன்று பொய்வாழ்வு வாழ்கின்றான்.
மாதத்தின் முதல்தேதி; மனம்மகிழத் திரைப்படமும்;
வீதியிலே நிகழ்த்துகின்ற வெறுமை அரட்டைகளும்
தானுற்ற பேறனவே தனித்தபெரு வாழ்வெனவே
தானுந்தன் மனைமக்கள் தமமையனைத்தும் அதேகதியில்
போக்குகின்ற வாழ்வும் ஓர் புவனத்து வாழ்வாமோ?
நீக்கி மனவிருளை நிலைக்கும் அறிவொளியை
ஏற்றாத கல்வியினால் என்பயனாம்? என்பயனாம்?
வற்றாத அறிவென்னும் நல்லூற்றைப் பேணி
ஆவலும் அதிசயமும் சாவாமல் உள்ளத்தில்
விஞ்ஞானம் நுட்பவியல் விந்தையிலே ஆர்வமுடன்
எஞ்ஞான்றும் பயில்வதிலே ஈடுபாடும் துடிதுடிப்பும்
கூடிவிட எழுப்புதலே கல்விக்கு அழகாம்!
தேடி அறிகின்ற தேர்ந்த மனப்பாங்கை
வார்க்கின்ற கல்வியே வளர்ச்சிக்கு அடையாளம்!
யார்க்கும் பயனற்ற யந்திர உலகத்தில்
தாவிப் புகுந்துவிட ஓர்படியாய் இல்லாமல்,
பாவி மொழிவெறியை, பிரதேச வெறிக்கனலை,
அடுத்தவன் பசியாலே அல்லலுறும் போதிலும்
விடுக்காத சுயநலத்தை, வீண்பேச்சு ஏசல்களை,
அறிவுச் சோகையினை, குறிக்கோளே இல்லாத
குழப்பத்தை, மனவிருளை கூட்டாத கல்விவேண்டும்.
மொழியிலே அத்தனையும் முற்றுமுளக் கலைகளையும்
வாழ்க்கைப் பண்புகளை, வானம்போல் இதயத்தை,
ஆழ்ந்த ஞானந்தான் அவனியிலே பெரிதெனவே
தெளிவாக்கும் எண்ணத்தைத் தளிரவே செய்திடுமேல்
புகட்டும் கல்விக்கோர் நிகரில்லை யாமே!
உணர்ச்சிக்கு அடிமையாகி, ஊரழிய பேரழிய
பணத்தைச் சேர்த்துவைத்துப் பகட்டாக வாழ்கின்ற
புன்மையினை நன்குணர்த்திப் புகட்டுவது நற்கல்வி!
நன்மையெல்லாம் பெற்று நாடெல்லாம் மேன்மைகொள
வையத்து மக்களெல்லாம் உய்யச் செயலாற்றும்
பக்குவத்தை, கடலெனவே பரந்த கண்ணோக்கைத்
தக்கபடி உருவாக்கும் தரம்மிக்க கல்விதான்
முன்னேற்றப் பாதைக்கு வழிகாட்டும் விளக்காகும்;
எந்நேரமும் ஒளிகுன்றா உன்னத தீபமதே!

பண்டைப் பழங்கதையின் பெருமையை ஓயாது
தொண்டை கிழியத் தோற்றுவதை விட்டொழித்துப்
புத்தறிவை நாடும் புதுவிழிப்பைப் பெறுவோம்!
கற்றியும் ஆற்றலினைக் கரையாது காப்போம்!
எத்திசையும் அறிவுச்சுடர் எட்டி இருளகற்ற
மெத்த கல்விதரும் மேன்மையைப் பெறுவோம்!
-- 0 --
திருமண வாழ்த்து

இன்பப் பொழுதென இக்கண மானதே
இசையால் எனைநீ மகிழ்விக் காயோ (இன்ப)

அன்புப் பெரியவர் ஆசை பெருகிடவே
ஆனந்தம் கொள்ளும் நம்மணக் கோலத்தால் (இன்ப)

திருக்கரம் பற்றநீ கண்ட கனவுகள்
உருவெடுத்த உவகை நிலையிதுவோ
இருவராய் நின்றதன் வகையும் மாறி
ஒருமனத் தவராய் ஒருநிலை எய்திய (இன்ப)
--- 0 ---
நினைவில் நிற்கின்றய்!
நினைவெல்லாம் ஊடுருவி நிற்கின்றாய்
எனையகத்தே பாலிக்கும் அன்பே! என் (நினை)
கணந்தோறும் அகலாது கற்பனைகள் கூட்டுவித்து
மணிக்கவிதை முத்துக்கள் அணிசெய்ய வருகின்றாய் (நினை)
வானகத்தே வதிசெய்யும் வளர்திங்கள் பொருள்கொள்ளும்
தேனகத்தே மல்குமெழில் தாமரையும் பொருள்கொள்ளும்
யானகத்தே பொருள்கொண்ட ஞானமெல்லாம் உருவெடுத்து
நாணிஎதிர் வரும் உன்னால் நடை அன்னம் பொருள்கொள்ளும்! (நினை)
-- 0 --
திருமண ஊஞ்சல் பாட்டு
ஆடாய், ஊஞ்சல் நீ ஆடாய்! (ஆடாய்)
நீடிய கண்ணாள் திருவுடனே
நீல ஒளிவீசும் அழகுடனே (ஆடாய்)
நாடும் நகரமும் சுற்றமெல்லாம்
நற்களிப் பெய்திட நயமாகவே நீ (ஆடாய்)
அழகும் பண்பும் சேர்ந்திருக்கையில்
அன்பின் அருளும் கூடியிருக்கையில் (ஆடாய்)
பழகும் இன்சுவைப் பண்ணிசைத்தே
பணிகின்ற அடியார்கள் வாழ்ந்திடவே (ஆடாய்)
-- 0 --
திருமண வாழ்த்து
அன்பும் திருவும் அறிவின் ஒளியின்
பண்பாம் சிறப்பும் பொருந்த நீவிர்
இன்பம் சேர இனிது வாழ்வீர்
அன்பன் நாரணன் அருளின் மேன்மையால்!
-- 0 --
நிலவைக் கண்டு…
நிலவை நீயென்று எண்ணி
நீள் கரம் நீட்டி
மலரெனப் பிடிக்கச் சென்று
மனம் பேதலித் தேனே -- உன்றன்
கோல உருவம் என்றன்
குகை மனத்தில் ஒளிக்கக்
கால உருவம் அழிந்து -- நான்
களிப்பில் மூழ்கி நின்றேன்
தேனின் சுவைப் பேச்சும்
தெளிந்த முகப் பாங்கும்
வானின் வளைவு இமையும் -- எல்லாம்
வளர்க்கும் இன்ப போதை
ஆடி வரும் நின் நடையும்
அரவம் போலுன் சடையும்
தேடி வருகின்ற கண்ணும் -- என்னைத்
திக்கு முக்காடப் பண்ணும்
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
26-7-2009
-------------

Saturday, July 25, 2009

தனிக் கவிதைகள் -- 11

ஆன்ம சக்தி
(23-8-1966)
கவியிற்றிக் காலமெல்லாம் கற்பனைகள் வாழவைத்து,
புவியிடத்துப் பிறப்புற்ற பொய்யுடலின் புன்மைவிட்டே
அவியாத பேரின்பம் அடைந்திடவே விருப்பமுற்றுத்
தவிக்கின்றேன் அருள்கூர்வாய் தயைசிந்தும் பேரொளியே!

சொல்நினைக்கக் கவிவருமாம்; சிந்தைக்குக் குளிர்தரவே
சில்லென்ற தென்றல்போல் சுவைமிக்க இசைவருமாம்;
வெல்கின்ற வீரம்வரும்; வேட்கைவரும்; சாந்திவரும்;
எல்லாமே வருமுன்றன் ஏற்றம்சேர் சக்தியினால்!

எழிலென்றால் உன்னுடைய இளமையெலாம் அடங்கிடுமோ?
பொழில்நடுவே முகையவிழ்க்கும் பொன்மலரே என்பேனோ?
பழிசொல்லும் காலமென்னை பாடாதே நின்னழகு
விழலாகி அழிவுற்றால்; வேண்டுவதோ வேதனையே?

கற்பனையால் பாப்பந்தல் கட்டியதில் உனையமர்த்தி
அர்ப்பணமாய்க் காவியத்தால் அர்ச்சித்தேன் நின்னடியில்;
உட்பதியும் சிந்தனைகள் உன்பெயரின் அம்சங்கள்,
சொற்பித்தன் எனையாக்கும் செயலெல்லாம் உன் திறமே!

உயிரென்பார், ஒளியென்பார்; உண்மையெனும் உருவென்பார்;
பயிர்வளர்க்கும் முகிலென்பார்; பாட்டிசையின் நாத்மென்பார்;
வயிற்றிலுறு பசியென்பார்; வறுக்கின்ற தணலென்பார்;
உயர்தருமென் உள்ளத்தின் ஊற்றேநீ என்பேன்நான்!

சாத்திரங்கள் உரைக்காத சஞ்சீவி அமிர்தம்நீ!
சூத்திரங்கள் உணர்த்தாத சூன்யம்நீ; விஞ்ஞானம்
மாத்திரம்தான் என்னவுன்றன் முகங்காணத் துணிந்திடுமோ?
பாத்திறத்தால் உளம்வெடிக்கப் பார்க்கின்றேன் உனையதிலே!
-- 0 --

என்னைத் தெரியாதா உன்றனுக்கு?

என்னைத் தெரியாதா உன்றனுக்கு? சொல்லிடாய்!
என்றன் இருப்பிடமும் மறந்தாயோ, கிளியே!
உன்னைத் தொட்டும் தொடாமலும் ஒன்றிப்
பின்னியும் பிணையாமலும் பரவிப் படர்ந்தேன்.
விண்ணின் பரப்பும் அணுவின் நுண்மையும்
துண்ணா அளவிட: எண்ணிடு என்னை.
கண்ணில் தெரியும் காட்சியில் உள்ளேன்.
எண்ணிலும் புலப்படா ஏற்றத்து இருப்பேன்.
நெஞ்சும் நினைவும் கண்ணும் பார்வையும்
வஞ்சி! உன் செவியும் கேள்வியும் நாவும்
பஞ்சாம் நாசியும் பளிங்கு மெய்யும்
என்றன் நிலைக்களன்; கோயிலின் வாயில்கள்
உன்றன் கரங்கள் ஏந்திய தீபத்தில்
குன்றா ஒளியில் குடியிருப்பேன் நானே!
காப்பதும் நான் தான்; காற்றால் அதனைத்
தீர்க்க முயல்வதும் நானே! அறிவாய்!
அணையாது தீபம்; உன்னை அழிக்கா தெரித்து
அழிவில்லை, சூடில்லை, குளிரில்லை, நடுக்கமில்லை.
மழைத்துளியில் கரையாய்நீ; மனக்கலக்கம் வேண்டாமே.
மெய்ப்பொருளை உணர்ந்தால் மேதினியில் பயமேது?
கைப்பொருளை விட்டுவிட்டு எங்கெங்கோ தேடுகிறாய்!
உன்னுள் புகவே உரிமையும் திறனும்
என்னில் இலையா? எண்ணாதே, பேசாதே!
உள்ளேயே இருக்கின்றேன், வரவேற்பா எனக்கு?
பிள்ளை மனத்தாலே ‘என்னுலகம்’ என்கின்றாய்;
உனக்காக ஒன்றுமில்லை; உற்றதெல்லாம் என்பொருட்டு.
பிணக்கும் கண்ணீரும் பிறப்பிப்பது நான் தான்!
கற்பனையும் சிந்தனையும் கன்வுகளும் நானே
கற்பித்த விளையாட்டுக் கோலங்கள்! உன்றன்
உறக்கம் விழிப்பெல்லாம் நானிமைத்து மூடு கின்ற
அறுதியிலா இயக்கங்கள்! அழுகையும் புன்னகையும்
நானிட்ட கட்டளைகள்! நின்னிதயம் நான்சமைத்த
சிறுகுடிலே! அதன் துடிப்பு சிறிதெனக்குத் தாலாட்டு!உன்
சிறுகரத்தை இயக்குகின்ற சக்தியெனை நீஅறிவாய்?
வரவேண்டு மென்கின்றாய்; வந்தபின்னும் உறங்குகிறாய்!
நிரவி நிற்கின்றேன் நீஇன்னும் உணரவில்லை!
(பராசக்தி, 15-9-1967 இதழில் வெளியிடப்பட்டது.)
--- 0 ---



உலகப் பேரவையில் உறுதி கொள்வோம்!

(அரசியல் தலைவர், ராஜாஜி அவர்கள் ஆங்கிலத்தில் எழுதி ஐக்கிய நாடுகள் சபையில் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்கள் பாடிய கவிதையின் தமிழாக்கம்.)

நாமிழைத்தத் தீவினைகள் நன்கழிய மன்னித்தே
பூமியிலே நாடுகளும் பூரணமாய் ஒன்றெனவே
சேமமெனும் கூடமிதில் சேர்ந்திருக்க அருளுவனோ?

அழிவுதரும் பகைமையினை ஆண்மையின் அச்சமதை
ஒழித்திடவே உலகமெலாம் ஓங்கும்பேர் அன்புதனை
விழிப்புறவே அறிந்திடுவோம் விண்பரந்த சபையினிலே!

வாளெடுத்துப் போர்தொடுத்து வாழ்விழந்த வல்லவரும்
நாளெதற்கும் பகைவிடுத்து நல்லமைதி நாட்டுமெனத்
தோளிடித்துக் கூறியசொல் நினைவிடிக்கத் தவறியதோ?

இதயத்தில் மறைந்தொளிரும் ஏற்றம்சேர் அணுவினிலே
பதிந்தமகா சக்திதன்னைப் பயன்பெருகச் செயலாக்கி
நிதம்நிலைக்கச் சாந்தியென நெறிகொள்வோம் பேரவையில்!

நாமிழைத்தத் தீவினைகள் நன்கழிய மன்னித்தே
பூமியிலே திசையெங்கும் பூரணமாய்ச் சாந்தியுறச்
சேமமெனும் கூடமிதில் சேரும்நமக் கருளுவனே!
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
25-7-2009
-----------------

Thursday, July 23, 2009

தனிக் கவிதைகள் -- 10

வாடும் மலர் நான்

வாழ்வென்னும் சோலையிலே
மலரென நான் பூத்து
வாடிடுமுன்னே நீ வாராயோ
-- நீ -- வாராயோ (வாழ்)

ஊழ்வினையின் சோதனையோ
உள்ளத்தின் வேதனையோ
உன் நினைவின் சோகமெனை உருக்கிடவே
-- எனை -- உருக்கிடவே (வாழ்)

காதலெனும் மணமிட்டுக்
காத்திருக்க எனைவத்தாய்!
காலமெலாம் உனையெண்ணிக் காணாமல்
--- உனைக் -- காணாமல் (வாழ்)

சாதலெனும் புயலென்னைத்
தழுவிடவே வருமுன்னே
தாவி நீ வாராயெனத் தவிப்பேனே
--- நான் -- தவிப்பேனே (வாழ்)
-- 0 --

ஓடிவா!
ஓ……ஓடிவா --- நீ
ஓ……ஓடிவா (ஓடிவா)

ஓடாமல் நின்றுவிட்டால் – நீ
ஓடாமல் நின்றுவிட்டால் -- என்
உள்ளமும்தான் நின்றுவிடும் -- நீ (ஓடிவா)

சூடாத மாலையேந்த -- நீ
சூடாத மாலையேந்த
சோபையெல்லாம் உன்னையேந்த – நீ (ஓடிவா)

நீளாத இரவு உன்னை
நெகிழ்த்திட வில்லையா?
தாளாத என் துயரம்
தணிந்திடவே இங்கே நீ (ஓடிவா)

மீட்டாத வீணையின்ப
மெல்லிசையும் கொடுத்திடுமோ
தீட்டாத ஓவியம் தான்
சீருடைத்தோ என்றெண்ணி -- நீ (ஓடிவா)
-- 0 --
தனிமை
தனிமையில் வாடி
தண்மையிலா தோடி
இனிமையும் இன்பமும் இணையா நாளாய்
எனவானதுவே எனதிந்த வாழ்வே!

உன் நினைவே துணையாய்
உன்குரலே இசையாய்
உன்முகமே பொன்னொளிர் மதியாய்
என்வாழ்வே உலகாய் ஆனதுவே!

மதுவுள்ள மலராய்ப்
புதுமையின் எழிலாய்
மெதுவாய்த் தவழ்ந்து மேவுமின் நதியாய்
வதிந்தாய் என்மனதில் வளர்ந்தாய் நீயே!
-- 0 --

மா வீரனின் மரண சாஸனம்
{1965-ம் ஆண்டில், பாகிஸ்தானுடன் நடந்த போரில் வீர மரணம்
எய்திய லெப்டினண்ட் கர்னல் என். என். கன்னா, இறப்பதற்குச்
சில தினங்களுக்கு முன் எழுதி வைத்த அழகிய ஆங்கிலக் கவிதையின் மொழிபெயர்ப்பு இது. ‘மெயின்ஸ்ட்ரீம்’ என்னும் பத்திரிகையில் வெளிவந்தது. அடியேனுடைய தமிழாக்கம் சென்னையில் வெளிவந்த ‘பராசக்தி’ என்னும் மாத இரு பத்திரிகையில் (1-12-1965) பிரசுரிக்கப் பட்டது.}

செங்குருதிப் பெருக்கோடும் சீரிமயச் சாரலிலே
மங்குகின்ற கதிரவனின் மாலைநிழல் ஆடுகையில்,
பொங்குதையா மனத்துயரம் போகின்றேன் உயிர்விடுத்தே
பங்கமிலா பெரும்புகழின் பாரதமோ துடிதுடிக்கும்! 1

வெண்பனியும் பெருமழையும் விறைக்கின்ற குளிர்ப்புயலும்
புண்படுத்தும் மலைப்பாதை புரியாத தொல்லையில்லை;
கண்படுக்கா தூர்ந்திடுவோம் கால்நோக்கும் திசையினிலே;
மண்படுக்க எதிரியினை வழிகண்டு சாய்ப்போமே! 2

சமர்தொடுக்க வீரத்தின் சாகஸங்கள் பலப்பலவாம்;
“நமைவெல்ல யாருளராம்?” நகையாடும் எம் கரங்கள்!
குமரரந்தோ நண்பர்கள் குலைந்துவீழத் துடித்தோமே!
அமரராகிப் போர்முனையில் அணையாத பேருற்றார்! 3

இமயத்தின் முகவடிவில் இளங்குருதி எழுத்தாலே
இதயத்தின் வலிமையினால் தாமெடுத்த கடமைதனை
சமயத்தில் முடித்தவரும் சாக்காடு புகுந்திட்டார்;
உமைகாக்க உயிர்கொடுத்த உத்தமராய் ஆகிவிட்டார்! 4

கண்ணயரும் இரவுகளில் களம்காத்து விழிப்புடனே
மண்ணயர்ந்த போதிலுமே மனமயரா துழைத்தவரின்
எண்ணங்கள் நினைவலைகள் இக்களத்தை விட்டேகிக்
கண்மணியின் அன்பகமாம் காதல்தரும் வீடேகும்! 5

தேசத்தின் புகழ்காக்கும் தீரனவன் திரும்புவனோ?
நாசத்திற் கிரையாகி நீங்குவனோ? என்றேங்கும்
ஆசைக்கே ஒருத்தியவள் அன்புமுகம் காணும்;தன்
பாசத்தின் உரிமைகொளும் பெருமக்கள் தமையெண்ணும்! 6

புலம்புகின்ற மலைச்சரிவில் புவியுடலைக் கைவிட்டே
துலங்குகின்ற புகழுடம்பைத் தரிக்கின்ற நேரத்தில்
புலம்புகின்ற என் நெஞ்சம் நினைவாட்டம்;
கலங்குகின்ற உள்ளத்தின் கடையாயிந் நினைவாகும்: 7

இறக்கின்ற மாவீரன் என்னுருவைத் தாய்நாடு
மறக்கின்ற தானாலும் மனந்தளரான்; கடனாற்றி
இறக்கின்ற எனையன்பால் இதுகாறும் காத்துவந்து
துறக்கின்ற உற்றவரைத் துயரின்றிக் காப்பீரே! 8
--- 0 ---
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
24-7-2009
------------------

தனிக் கவிதைகள் -- 9

என் பேறு
(விவேகானந்தா கல்லூரி தமிழாசிரியர் திரு ப. இராமன் அவர்களிடமிருந்து ஒரு கடிதம் பெற்ற மகிழ்ச்சியால் எழுந்த கவிதை : 27-8-1963)

ஆறா நெடுமனத் தாசையால் வாடினேன் வாழவே,
கூறாக் களிப்பென்னைக் கோடியாய்க் கூடவே, நாளுமே,
மாறா தகாதலும் மாண்புற நாடின முடங்க லென்
பேறா குமாலென் பெருவாழ்வு பழுத்தது போலுமே!
-- 0 --
ஆசிரியருக்கு
{இந்நான்கு விருத்தங்களும் , அடியேனின் கல்லூரி தமிழ் ஆசிரியர், திரு ப. இராமன் அவர்களுடைய இனிய கடிதத்திற்குப் பதிலாக எழுதி அனுப்பப் பட்டவை. இதில் குறிப்பிடப்படும் அவர் இயற்றிய வெண்பா இந்த கவிதைகளின் முடிவில் தரப் படுகிறது --- 6-9-1963}

அன்புடைய ஆசானின் ஆசி தன்னை
அரியதொரு செல்வமெனப் போற்று கின்றேன்;
இன்புடைய சொற்களுடை முடங்கல் தானும்
என்பேறே எனவெண்ணிப் பெருமை கொண்டேன்;
என்புடனும் தசையுடனும் நரம்பும் பலவும்
இயைந்தபிணி உடலுக்குள் உள்ளம் வைத்துப்
பண்புடைய கருத்துடனே அன்பும் சேர்த்துப்
படைத்திட்ட தெல்லாமே இதற்குத் தானோ?
மணிமுத்துப் பொய்கையென தங்கள் கடித
நல்முத்துச் சொற்கடலுள் குளித்து நலமே
அணிவித்துக் கொண்டெனது அறிவைப் பெருக்கி
ஆனந்தம் தானடைந்து நின்ற காலை
தனிமுத்தாய் ஆனதொரு வெண்பா என்றன்
தலையைத்தான் நிமிர்த்துமதன் அழகி னாலே
பனிமுத்துத் தாமரையில் தங்கும் திருவே
‘பத்ம’த்தில் தங்காத முரணை விட்டீர்!

என்கவிதை நற்கவிதை அல்ல வெனினும்
என்றன்தமிழ் ஆசிரியர் அருளைப் பெற்றால்
பொன்கவிதை ஆகிடுமே! போதும், போதும்!
பார்முழுக்கப் புகழொன்றும் வேண்டாம், வேண்டாம்!
உன் கவிதை முளைவிட்டுத் தழைத்தே ஓங்கி
உயர்ந்ததுவாம் தருவானால் விய்ப்பும் உண்டோ!
இன்கவிதைக் காவியமும் இயற்றும் பேறாம்
இன்பத்தை அடைவேன் நும் அருளினாலே!

ஆசிரியர் அன்புக்குப் பாத்திர மாகும்
ஆசையன்றி வேறில்லை எனக்குத் தானே;
நாசிறிய தென்றனக்கே என்ப தாலே
நன்கமையா என்சொற்கள்; நல்கா வின்பம்;
‘நீ சிறியன்’ எனக்கூறி, என்றன் பிழையை
நீக்கிவிட்டு நலமெடுத்து (இருக்கு மாயின்),
பேசரியப் பெருமையுடை ஆசி ரியரே,
பெருமருளைப் பொழிவீரே! பணிகின் றேனே!
--- 0 --
{திரு ப. இராமன் அவர்கள் அடியேனுக்கு அனுப்பிய வெண்பா:-
செந்தா மரைமலரும் சீர்கவிப் பத்மமும்
அந்த மலர்ச்சியால் ஒப்பரால் -- அந்தத்
தண்டா மரைகூம்பும் பத்மத்திற் கஃதில்லை
பண்டே அறிகுவேன் நன்று.}
-- 0 --

அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
23-7-09
--------------

Wednesday, July 22, 2009

தனிக் கவிதைகள் -- 8

குறிஞ்சி மகள்
இருமலைச் சாரற்றேன் ஈட்டுங் குறிஞ்சி
யருமலர் சூடும் அகில்சூழ் அரிமண
லோதி யரவமென யாயுள்ளப் பேதறவு
மல்கிடச் செல்லும் மடவரல் வல்லி
கடிகாதல் முந்த கருயாமத் ‘தென்னையும்
நெடிதுகாத் தாரோ நிலத்தே’ எனவுயிர்த்து
நீள்வழிப் போவள் கடிது.
{ஏழடிப் ப#றொடை வெண்பா)
குறிஞ்சி
களவு
(ஓதி – கூந்தல்; பேதறவு – மயக்கம்; அகில் – அகில் மணம்.
தலைவனை நாடிச் செல்லும் தலைவியினைப் பற்றி இயற்றியது.
குறிஞ்சித் திணைக்கு உரிய முதல், கரு, உரிப் பொருள்கள் அமைந்திருத்தலைக் காண்க.)
-- 0 --
கவி ஊற்று -- 1
உன்னைக் கண்ட போதினிலே -- மன
ஊற்றில் கவிதை சுரக்குதம்மா!
கன்னல் மொழியைக் கேட்கையிலே
கனிந்த பாடல் பிறக்குதம்மா!

நித்தம் நின்னை நினைக்கையிலே -- மன
நிறைவால் காவியம் தோன்றுதம்மா!
கத்துங் குயிலின் ஓசையிலே -- உன்றன்
காதல் இசையே கேட்குதம்மா!

முந்தைப் பிறவி நினைவெல்லாம் -- உளம்
முன்னே நின்று வாழுதம்மா!
எந்தன் உள்ளக் கோயிலிலே -- உன்
எழிலே திருவாய் ஆளுதம்மா!

நேற்றோ இன்றோ நெடுநாளாய் -- மிக
நீடு நிலைத்த கற்பனைகள்
ஆற்றின் நீராய்க் காதலெனும் -- பெரும்
ஆழி தன்னைச் சேருதம்மா!

வானம் போன்று பரந்ததம்மா! -- இவ்
வையம் போல நிறந்ததம்மா!
மோனக் கடலின் ஆழம்போல் -- மன
மோகம் பெரிதாய் மூண்டதம்மா!

எண்ணப் பொழிலின் நடுவிருந்து -- நீ
ஏந்தும் யாழின் ஒலியெழுப்ப
வண்ணக் கற்பனை உருவெடுத்த -- இன்ப
மாரி பொழிந்து சிறக்குதம்மா!
-- 0 --
கவி ஊற்று -- 2
வாடிக்கிடந்த என்னுள்ளம் வறட்சியுற்று, கற்பனையைத்
தேடிக்கிடந்த என்னெஞ்சம் சோர்வடைந்து போகையிலே,
நாடியிழந்த உடலுக்கு நல்லுயிரே வந்ததுபோல்
மூடிக்கிடந்த இதயத்தை முன்வந்தே திறந்திட்டாய்!

பாரதனில் என்வாழ்வு பாலைவன வீணிலமாய்ச்
சீரெதுவும் இல்லாமல் தீர்ந்திடுமோ எனவஞ்ச,
வேறெதுவும் இன்மையினேன் வீறுற்றே எழுந்திடவே
சீரதுவே வருவதுபோல் சீராள்நீ வந்தனையோ!
-- 0 --
இசைப்பாய் என்று வந்தேன்!

இசைப்பாய் என்று வந்தேன் -- உன்
இசையில் மயங்கி நிற்க -- நீ (இசைப்பாய்)

மலராத மொட்டு மலர
மணக்காத மலரும் மணக்க
வளராத முல்லை வளர
வழங்காத இன்பம் தரவே -- நீ (இசைப்பாய்)

தணியாத தாகம் கொண்ட
சரகான தளிரும் தழைக்க
இனிக்கின்ற காதல் தன்னால்
இறக்காது நானும் பிழைக்க -- நீ (இசைப்பாய்)
-- 0 --

யாருக்குக் காத்திருப்பாய்?

யாருக்குக் காத்திருப்பாய் -- நீ

ஊருக்குள் இருளகற்ற
உலவிவரும் நிலவுக்கா?
தாருக்குள் வண்டொலிக்கும்
தளிர்நடையாள் முகத்துக்கா? (யாருக்கு)

நீருக்குள் நெளிந்தோடும்
நீள்கயலின் பார்வைக்கா?
பாருக்கே பெருமையெனப்
பரிவுடைய கண்ணுக்கா? (யாருக்கு)

வீரத்தின் உருவெடுத்து
வளைந்தநெடு வில்லுக்கா?
நேருக்கு நேரான
நீள்புருவம் இரண்டிற்கா? (யாருக்கு)
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
22-7-2009
---------------------

Tuesday, July 21, 2009

தனிக் கவிதைகள் -- 7

கவி நெஞ்சம்

(1960-ம் ஆண்டு, சென்னை கல்லூரிகள் தமிழ் மாணவர் மன்றத்தில்
நடைபெற்ற கவி அரங்கத்தில் பங்கு பெற்ற கவிதை.)

காப்பு

வெள்ளத்தின் வடிவனைய விரிநெஞ்சைக் கொடுத்திட்டு,
உள்ளத்தின் வடிவணைக்க உயர்ந்ததுவாம் கவியமைத்து,
கள்ளத்தின் வடிவழிய கருணையினை அளித்திட்ட
அள்ளத்தேன் அன்பருளும் ஐயனையே சரணம்யான்!

கவி நெஞ்சம்

தேனனைய சுவைபடைத்த தெளிவான பலநூல்கள்
கோனனைய தகுதிபெறும் புலவோர்கள் படைத்தனரே!
ஊனனைய உயிரனைய உலகோரை மகிழ்விக்கும்
வானனைய கவிதைதனை நெஞ்சனவே தொடங்குகிறேன்!


அன்புருவாய் ஆனவளாய், ஆசைமிகப் படைத்தவளாய்
இன்புருவாய் கவிபடைத்து இனிமையெலாம் அதிலடக்கித்
துன்புறுமாம் உளங்களிக்கத் துணைவியெனப் பெயரெடுத்துப்
பண்புறுவாய்; கலையிடத்துப் பக்திகொண்ட எழிலாள்நீ!

நெஞ்செனவே நானுன்னை நேசமுடன் அழைத்திடுவேன்;
பஞ்செனவே பூவெனவே பண்பாடும் குயிலெனவே;
மிஞ்சுகலைக் கவியிடத்து மீளாத காதலினால்
துஞ்சுமெழில் கூடிடவே தூயகவி படைப்பாய்நீ!

துள்ளிவரும் ஓடையென, துளைத்துவரும் வேலெனவே,
மெள்ளவரும் வேழமென மேவிவரும் பல்கவிதை
அள்ளிவரும் ஆறேநீ! அணையாது என்னிதயம்
கொள்ளவரும் கீர்த்தியெலாம் கொழுந்துவிடும் தீபம்நீ!

பண்ணென்னும் பாவாய்நீ, பதமான விளைவுடனே,
மண்ணென்னும் மாண்புடைய மதிபுலவர் மனம்முளைத்து,
கண்ணென்னும் கருத்தாகக் கதிரொளிபோல் தினம்தழைத்து,
எண்ணென்னும் மதிப்பின்றி இனியநடை கற்றாய்காண்!

ஆயிரமா யிரமெண்ண அலைகளுமாய்; திரள்கருத்து
ஆயிரமாம் முத்துக்கள்; அரும்பவள அணிநலன்கள்;
ஆயிரமாம் கற்பனைகள், அழகொளிரும் சங்கங்கள்;
ஆயிரமாய் உரைத்தாலும் அடங்காத கடலணையாய்!

கம்பன் தனை ஆண்டாய்நீ! கவிநெஞ்சக் காரிகையே!
இம்பரும்பர் போற்றும்பேர் இலக்கியத்தைப் படைத்திட்டாய்,
நம்புகாதை சிலம்புதனை நயம்புகலும் குறளதனை
அம்புவியில் அழகாக அளித்திட்ட நங்கையும்நீ!

காவியமாம் காதலியே! கடுவேகம் உன்னிடத்துப்
பாவிசைப்பப் பண்டொருநாள் பல்லவனார் பொன்னுடல்தான்
ஓவியமே கரிந்ததுபோல் உலகுபுகழ்க் கவிதையினால்
சேவிப்பச் செய்தவொரு தீங்கவிஞன் தனைக்காணாய்!

வாழ்த்துவதில் வீழ்த்துவதில்; வகையாகத் துன்பத்தில்
ஆழ்த்துவதில் அகற்றுவதில்; அழகான இன்பத்தில்
சூழ்த்துவதில் சேர்த்துவதில்; சொல்லடுக்கப் பல்பொருளைத்
தாழ்த்துவதில், தருகுவதில்; தனிப்பெரும்பேர் பெற்றாய்நீ!

வசைபாட வகைசெய்தாய், மதிக்காத புல்லரிடம்;
இசைபாட இனிதானாய் இரக்கங்கொள் செல்வரிடம்;
நசைபாட நனியானாய், நற்கவிதைப் புலவரிடம்;
திசைபாட தினமும் தான் செருக்காகச் செல்வாய்காண்!

கோலமிடும் வண்ணத்துக் கூடுமிசை ஒலியதனை
ஓலமிடும் பெருங்கடல்தான் ஓங்கார ஓசைதனைக்
காலமிடும் ஆடலினைக் காணாத புதுமைதனைச்
சீலமிகப் படத்திட்ட சீர்கவிதை எத்தனையோ!

பொழியாத கருத்தில்லை; பொலியாத நொடியில்லை;
வழியாத மனிதரில்லை, வார்க்கின்ற இன்பத்தால்;
அழியாத பொருளாடும் அளவற்ற கவிதைய்லே;
எழிலாகும் எழிலெல்லாம் எடுத்தாளும் உன்பாட்டால்!

மந்திரத்துப் பிறந்ததுவோ; மணியான இக்கவிதை
சுந்தரத்துத் தோய்ந்ததுவோ; சுவைகாணும் உள்ளத்தின்
தந்திரத்தின் வடிவிதுவோ, சொல்முத்துக் கோவையெல்லாம்;
உந்திரத்துப் பெருமையெலாம் ஓயாது பாடுகின்றார்!

நூறெனவே ஆண்டுகளும் நூதனமாய் நடந்தாலும்,
கூறுமெழில் குறையாத குழலாளென் வளர்நெஞ்சே!
நூறில்லை, ஆயிரமாம் நூல்களிதைக் கூறிவிடும்
ஊறில்லை, உன்னிடத்து உள்ளதெலாம் கவிவளமே!

நீதானே என்நெஞ்சம்! நீயேதான் என்னிதயம்!
போதாமே உன்னழகு; பொலிந்திடுமுன் சொல்மணிகள்;
கோதாய்!என் ஒண்விளக்கே! கொவ்வைச்செவ் வாய்திறந்து,
போதாய்,நீ இன்கவியைப் படைத்தாய்!நீ வாழ்கவென்றும்!
-- 0 --
அவையடக்கம்
(1963-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், தில்லி தமிழ்ச் சங்கம் சார்பில் நடந்த நிகழ்ச்சியில், அடியேனுடைய “கவி நெஞ்சம்” என்னும் கவிதை படிக்கப்பட்டது. அப்போது, தொடக்கத்தில், இந்த “அவையடக்கம்” என்னும் கவிதையைப் படித்தேன்.)
சொல்லாலே கவியமைத்து விந்தை செய்து
தோன்றுகின்ற கற்பனைக்கே உருவம் தந்து
கல்லாலே ஆனதுபோல் உறுதி கொள்ள
கட்டிவைத்தார் காவியத்தைக் கவிஞ ரெல்லாம்.
புல்லான சிறுவன்நான் அறிவு கெட்டுப்
புகழ்மிக்கப் புலவோர்கள் இடையில் நின்று
செல்லாத கவிதைதனை உதிர்க்க வந்தேன்
செவிமடுத்துச் சிறிதென்னை மன்னிப் பீரே!

அழகழகு சொற்களையே ஆளு கின்ற
அரியதமிழ்ப் பெரியோர்கள் முன்னி லையில்,
பழகுமொழி இன் தமிழில் வல்லு நர்கள்
பக்கத்தில் அமர்ந்திருக்க அமைதி யோடு
அழகுதமிழ்ப் பாடலினைக் கேட்க எண்ணும்
ஆசைக்கு மோசந்தான் என்று வந்த
வழிதிரும்பி வீடுசெல்ல எழுந்தி டாதீர்
வணங்குகிறேன் கேட்பீரென் கவியைத் தானே!

மூளுகின்ற கற்பனையைத் தன்னுள் தாங்கி
மொட்டன்ன சொல்லெடுத்துக் கவிதை மாலை
நீளுகின்ற தாய் அழகாய் ஆக்கி விட்ட
நெஞ்சமென்பாள் மென்மையினாள் ஆற்றி வந்த
நாளெண்ணி அவளுக்கோர் பாட்டி சைக்க
நானெண்ணிப் புனைந்திட்ட கவிதை தன்னைக்
கேளுங்கள், பிழைபொறுத்து; நன்மை தங்கக்
கூட்டுங்கள் பெருமைதனை எனக்குத் தானே!
-- 0 --
அன்புடன்
தாஸன்
அன்பில் ஸ்ரீனிவாஸன்
21-7-09
---------------